Tuesday, March 2, 2021

ஹனீஸ் முஹம்மத்

 ஒரே ஒரு குறைதான்.....

ஹனீஸ் முஹம்மத்

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

நாவல்- "கொள்வதெழுதல் 90"

நாவலாசிரியர்- தீரன் R.M.நெளஷாத்.

வெளியீடு- காலச்சுவடு பதிப்பகம்(இந்தியா)


#போராளிகளே_புறப்படுங்கள்

நம் புத்தக அடுக்குகளிலுள்ள சில புத்தகங்கள் வாசிக்கும் வரை நம் மனதை உறுத்திக் கொண்டே இருக்கும். அப்படி என்னை வாசிக்கும்வரை தொடர்ச்சியாக உறுத்திக் கொண்டிருந்த புத்தகம்தான் "கொள்வதெழுதல் 90".

இந்நாவலை வாசித்தும் ஒரு வருடத்தை அண்மித்திருந்தாலும், இப்போதும் அதன் காட்சி படிமங்கள் இன்னமும் மனதில் நிற்கின்றது. அதுவே நாவலின் ஆழத்தை காட்டுகின்றது. அதனடிப்படையில் தான் இப்போது இந்த குறிப்பை பதிவிடுகிறேன்.

நாவலாசிரியர் தீரன் RM.நௌஷாத் இன் "வல்லமை தாரயோ..!" முதல் சிறுகதை தொகுப்பாகும்.

எழுத்தாளர் சுந்தர் ராமசாமியின் 75, பவள விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற "நட்டுமை" நாவல், இலங்கை அரசின் தேசியசாகித்திய விருதை பெற்ற "வெள்ளி விரல்" சிறுகதை தொகுதிகள் பேசும்படியாக இருக்கின்றது. 

"கொள்வதெழுதல் 90" நாவலானது, பெரும்பான்மையின் நசுக்குதலுக்கு உள்ளான தமிழ் சமூகம், அவர்களின் விடுதலைக்காக போராட எழுந்த போராட்ட குழுக்கள், மூன்றவாது சிறுபான்மையான முஸ்லிம்களை அவர்கள் ஒடுக்க முற்பட்ட போது கிளர்ந்த மனவலைகளின் அடிப்படையிலும்,

1985 பிற்பட்ட காலப்பகுதியில் இலங்கை முஸ்லிம்களின், குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களின் வாழ்வியலை சூழ்ந்த பயங்கர கோரத்தையும், போரியல் தடங்களையும், தந்களுக்கான ஒரு தலைமை,  தங்களுக்கான ஒரு கட்சி என்ற அரசியல் சித்தாந்தம் படிந்த அப்போதைய முஸ்லிம்களின் மனநிலையை அச்சொட்டாக பதிவு செய்திருக்கின்றார் நாவலாசிரியர். 

பள்ளிமுனை கிராமத்தில் முஸ்லிம் கட்சியின் தலைவரின் கூட்டத்தின் ஏற்பாடுகளும், அவ்கட்சியின் தீவிர போராளியான முத்துமுகம்மது, மைம்னா காதலிருந்தும் கதை ஆரம்பிக்கின்றது, 

"தலைவர் வருகையை ஐம்பத்து நான்காவது தடவையாக ஸ்பீக்கரில் அறிவிப்பு செய்யும் முத்துமுகம்மது".

போராளிகளே புறப்படுங்கள்" என்ற கோஷங்கள், பூவரச மரங்களில் தொங்கவிடப்பட்டிருக்கும் தலைவரின் படங்கள், வர்ண கொடிகள்.

நாவலானது வாழ்வில் பொறுப்புகளை சுமந்திருக்கின்ற ஒரு பெண்ணின் "மைம்னா" வின் வாழ்வியல் துன்பமும், அப்போதைய சமூக வறுமை நிலையையும், முத்து முகம்மதினதும் மைம்னாவின் காதலும், தலைவர் இஷாக் இனதும், முத்துமுகம்மதின் அரசியல் எழுச்சியும். இவைகளை மைய்யப் புள்ளியாக வைத்து நகர்ந்து கொண்டிருக்கிறது.

நாவலில் வறுமையின் காரணமாக பணிப்பெண்களாக வெளிநாடு செல்லும் பெண்களை 'சப்பு' என்று அழைக்கும் தரகர்கள் எப்படியெல்லாம் மோசடி செய்தார்கள்,  என்பதை நாவலாசிரியர் மைம்னாவை அடைவதற்காக அந்த சப்பு எப்படியெல்லாம் திட்டம் தீட்டி, லொட்ஜில் வைத்து வன்புணர்வு செய்கின்றார் என்பதனூடாக சமூகத்தை விழிப்புணர்வு செய்திருக்கின்றார்.

இவற்றுக்கிடையில் அப்போதுகளில் நடந்த அதிகார அத்துமீறல்கள், அடையாளமற்ற கொலைகள், குத்துவெட்டுக்கள்.

நாவலில் வரும் ஒவ்வொரு சம்பாசனைகளும், பேச்சு வழக்கும், மற்றும் காட்சியமைப்புகளும் நவலாசரியரின் கதை சொல்லும் திறனை அளவிட்டிற்கு அப்பால் கொண்டு செல்கிறது. இப்பகுதியில் வசிப்பாவனாக  நானிருப்பதால் ஒவ்வொரு வரிகளிலும், ஹாஜியாரின் திண்ணையிலும், நெய்னாவின் டீக்கடையிலிருந்து அரசியல் அலசும் வித்துவான்களின் ஒருத்தனாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக 'போராளிகளே புறப்படுங்கள்' என்ற கோசம் ஒலிக்கும் போதும், தலைவர் இஷாக் பேசும்போது மாபெரும் கூட்டத்தில் நானும் ஒரு முகமாக மெய்சிலிர்த்து போனேன். 

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப தீவிர போராளியான எனது மாமாவை இக்கதையின் பல இடங்களில் பொருத்தி பார்த்துக் கொண்டேன். தன்னிடமிருந்த இளமை, தைரியம், பொருள்,  அனைத்தையும் தியாகித்தது மட்டுமல்லாமல், உயிர் அச்சுறுத்தல், இரண்டு தடவைகள் புலிகளின் சித்திரவதைகள், தலைமறைவு.

துரதிஸ்டவசமாக இன்னுமே  போராளியாக தான் இருக்கின்றார். அவரைப் போல எத்தனையோ பேர்கள் இன்னுமே அதே நிலைமை தான் இருக்கிறார்கள். முத்துமுகம்மதை போன்று சேர்மனாகி, எம்பி ஆவது எல்லாம் கதைகளிலும் திரைப்படங்களிலும் தான் நடைபெறும். 

நாவலில் காணப்படும் பெரும்பாலான சம்பவங்களில் கதைகளும் அப்போதைய நடைபெற்ற அரசியல் மற்றும் போரில் சம்பவங்களின் உண்மை தன்மையை  பின்னணியாகக் கொண்டு புனையப்பட்டதாக இருக்கின்றது. 

இந்த நாவலை தலைவர் மீது மக்கள் வைத்திருந்த அன்புக்கு காத்திரனமானாதாகவும், அப்போதய சம்பவங்களின் ஒரு ஆவணப்படுத்தலாகவும் எடுத்துக்கொள்ளலாம். தற்போதைய நமது தொடுதிரை சந்ததியினர்  இந்த  நாவலையாவது கட்டாயம் வாசிக்க வேண்டும். இந்த நாவல் ஒட்டிய உண்மையை அவர்கள் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக அமையும். 

"போராளிகளே புறப்படுங்கள்... ஓரத்தில் நின்றுகொண்டு ஓய்வெடுக்க நேரமில்லை... ஆலமரமாய் நம் சமூகம் வாழ வேண்டும், அதை வாழ்விக்க புறப்படுங்கள்."

ஒரே ஒரு குறைதான்,"மச்சான்... மச்சான்..." என்று மண் மணக்கும் மைம்னாவின் காதலை தொடர்ந்து நுகர முடியவில்லை. 

'நாவலிருந்து'....

"... வேகக் காற்றின் விசையில் அசைகின்ற வெண்முகில்

கூட்டங்களே ... உயரத்தில் உலவுவதால் நீங்கள் உயர்ந்து

விடுவதில்லை. நாங்களோ மரங்கள் மண்ணின் சுவாச

வேர்கள் பேய்க்காற்றுவீசும் வேளையிலும் புயல் இரைகின்ற

போதிலும் மின்னல் இடி முழக்கம் அச்சுறுத்தும் சமயங்களிலும்

போராடி மடிவதற்கும் அப்புனித பாதையிலே புன்முறுவல்

பூத்த முகத்தோடு சிந்தும் சிவப்பு இரத்தத்தில் தோய்ந்து

வீழ்வதற்கும் ... எழுவதற்கும் ஆயிரமாயிரம் போராளிகளைத்

தந்த பள்ளிமுனைத்தாயகத்தின் போராளிகளே புறப்படுங்கள்..!

நம் கட்சியைக் காப்பாற்ற இது நமது உரிமை இது

நமது கடமை ...இது நமது ஒற்றுமை ... ஒன்றை மட்டும்

உறுதியாகத் தெரிந்து கொள்ளுங்கள் ... சிங்களக் கட்சிகளின்

கால் தூசியாக ஒட்டிக்கிடக்கும் முதுகெலும்பற்ற 'முக்கியத்

தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களே ... இந்தப்

பள்ளிமுனைக் கர்பலாக் களத்திலிருந்து, உங்களுக்கு இந்த

இஸ்லாமியக் கட்சித் தலைமைத்துவம் பகிரங்கச் சவால்

விடுக்கிறது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரதேச சபைத்

தேர்தலில் இம்மாவட்டத்தில் ஆளும் ஐ.என்.பி. கட்சியால்

ஒரு சபையைக் கூட வெல்ல முடியாது ....”

"நாரே தக்பீர் ...'' 

செய்லான் ஹாஜியார் எடுத்துக்கொடுக்க -"அல்லாஹு அக்பர்!" கூடடம் அதிர்ந்தது. தலைவர்தொடர்ந்தார்.--

Hanees Mohamed  #HH

No comments:

Post a Comment