Monday, April 12, 2021

சப்ரி..ஏறாவூர்

அற்புதமான மொழிநடை கொண்ட நாவல்.

ஏறாவூர் சப்ரி


 தீரன். ஆர்.எம் நௌஷாத் எழுதிய கொல்வதெழுதுதல் 90 வாசிக்கக் கிடைத்தது. இந்நாவலை காலச்சுவடு பதிப்பித்திருந்தது. 2003 காலப்பகுதியில் முஸ்லிம் குரல் பத்திரைகையில் தொடராக வெளிவந்திருந்தது. ஏலவே நட்டுமை நாவலும் வெள்ளிவிரல் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்து பல விருதுகளைப் பெற்றிருந்தது. 

1990 களில் கிழக்கிலங்கை முஸ்லிம் கிராமங்களில் தலைவிரித்தாடிய அட்டூழியங்களின் சிறு பகுதியை சுவாரஷ்யமான தனது எழுத்தினால் ஆவணப்படுத்தியுள்ளார் ஆசிரியர். பேச்சு வழக்கும் மக்களின் உணர்வு பூர்வமான எண்ணங்களையும் கருவாகக் கொள்கிறார். எமது அரசியலின் ஆரம்பப் பரிமாணங்களை அப்படியே ஒப்புவித்து வெற்றியும் கண்டுள்ளார். அழகான கிராமிய மனம் கமழும் காதலையும் நாவலின் ஆரம்பம் முதல் கடைசி வரை ஆழமாக வேரூன்றச் செய்யப்பட்டுள்ளது. 

தெகிட்டாமல் ஒரே மூச்சில் வாசித்துவிடக் கூடிய அற்புதமான நாவல்களில் கொல்வதெழுதுதல் 90 ம் ஒன்றென்று சொன்னால் மிகையில்லை.

முத்து முஹம்மது எனப்பட்ட கிராமத்து இளைஞனின் வாழ்வில் இடம்பெறும் அன்பு மற்றும் அரசியல் நகர்வுகள் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் இல்லையெனினும் ஒவ்வொரு வாசகனும் வாசித்து பயன்பெறக் கூடிய அற்புதமான மொழிநடை கொண்ட நாவல்.

வாசியுங்கள் நிச்சயம் உங்கள் மனதில் அது ஒரு மூலையிலாவது அப்பியிருக்கும்.

Mohamed Sabry

Thursday, April 8, 2021

அஷ்ரப் சிஹாப்தீன்

 

அஷ்ரப் சிஹாப்தீன்


பொதுவாகவே இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியல் நெருக்கடிகள், ஒரு சிறுபான்மைச் சமூகமாக அதன் இருப்பியல் வரலாறு குறித்த இலக்கியப் பதிவுகள் எழுதப்படவில்லை என்ற கவலை முஸ்லிம் சமூக ஆர்வலர்களுக்கும் கல்வியியலாளருக்கும் ஓர் உறுத்தலான அம்சமாகவே இருந்து வருகிறது. 

அந்தக் கவலையை ஒரு சிறு அளவிலேனும் குறைக்கும் பணியை தீரன் ஆர்.எம். நௌஷாத்தின் “கொல்வதெழுதல்“ நாவல் தீர்த்து வைத்திருக்கிறது என்பேன்.

“கொல்வதெழுதல் - 90” நாவலின் ஒரு மேலதிகப் பிரதி என்னிடம் உண்டு. ஒரு பிரதியை எல்லோருக்கும் கொடுக்க முடியாது. கேட்பவர்களில் நான் தீர்மானிக்கும் ஒருவருக்குக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.